சோகத்தை ஏற்படுத்திய திருவண்ணாமலை நிலச்சரிவு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.

 வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலாள் திருவண்ணாமலையே தற்போது சோகத்தின் மூழ்கியுள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் தற்போது தமிழகத்தையே வாட்டி வதைத்து கொண்டிருக்க, பெஞ்சல் புயலின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடுமையான மழை பெய்தது. இதன் காரணமாக 2,668 அடி உயரத்தில் உள்ள திருவண்ணா மலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அதனால் கற்கள், ராட்சத பாறைகள் உருண்டு வந்தது. குடியிருப்பு பகுதிகளையும் வாகனங்களையும் சேதப்படுத்தியது. 
குறிப்பாக வ.உ.சி. நகர் 11-ஆவது தெருவில் மலையடிவாரத்தில் இருந்த ராஜ்குமார் என்பவரின் வீடு முழுமையாக மண் சரிவில் சிக்கியது.  அந்த வீட்டினுள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார் -, மீனா - 26, இனியா - 6, மகா - 12, கவுதம் - 8, வினோதினி - 14, ரம்யா 8 ஆகியோர் மண் சரிவில் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மீட்புத் துறையினர் உடனடி மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த மீட்பு பணி தொடர் மழை மற்றும் மின்சாரம் இல்லாத நிலையில் இருள் சூழ்ந்து காணப்பட்டது இதனால் மீட்ப பணியை நிறுத்திவிட்டு திங்களன்று காலையிலிருந்து மீண்டும் பணியை தொடங்கினார். 

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நிலச்சரிவில் சிக்கிய ராஜ்குமார் குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரும் திங்கட்கிழமை மாலை நேரத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். எப்படியாவது அந்த ஏழு பேரும் உயிர் பிழைத்து வர வேண்டுமென்று திருவண்ணாமலை மாவட்ட மக்களின் வேண்டுதலாக இருந்தது. ஆனால் அவர்களின் பிரார்த்தனை பலிக்காமல் தற்பொழுது ஒரு குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்திருப்பதால் திருவண்ணாமலை நகரமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதற்கிடையே வரும் பதிமூன்றாம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட இருக்கும் நேரத்தில் இந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு வருடமும் அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்படும் தீபத்தை காண குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தற்போது கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை மீது செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்