நேற்று சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மு க ஸ்டாலின் எதிர்கட்சிகளை கடுமையாக சாடினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் களம் தற்போது கொதிக்கும் வெயிலை விட சூடு அதிகம் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேலும் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரும் பம்பரமாய் சுழன்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று மாலை சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரித்தும். மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் படித்து ஐஏஎஸ் ஐபிஎஸ் என உயர் பதவிகளை அடைந்து வருகிறார்கள் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு இட ஒதுக்கீட்டை நம் கையில் இருந்து பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பாரதிய ஜனதாவுடன் பாமகவும் கூட்டு சேர்ந்து சமூக நீதியை கேள்விக்குறியாக்கும் வகையில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்ய ஒன்றிணைந்துள்ளன. இந்த தீய சக்திகளை மக்கள் புரிந்து கொண்டு ஒதுக்கிவிட்டு நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தற்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிடம் மாடல் ஆட்சியால் ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி தம் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளை முதல் பட்டதாரிகளாகவும் உயர் பதவியில் அமர்த்தியும் அழகு பார்க்கும் இந்த செயலை பார்த்து நம் எதிர்க்கட்சிகளுக்கு மனவேதனையை தந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் அங்கம் எல்லாம் எரியுதடி மாலா.. அந்த பேனை பன்னிரண்டாம் நம்பர்ல வை அப்படி என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் வந்து விட்டார்கள். எனவே உங்கள் பொன்னான ஆதரவை திமுக கூட்டணிக்கு அளித்து தமிழகத்தை காத்திட ஒன்றிணைவோம் என பேசினார்.
தற்போது தமிழகத்தில் திமுக கூட்டணி ஒருபுறமும், பாஜக கூட்டணி ஒருபுறமும், அஇஅதிமுக கூட்டணி ஒருபுறமும், நாம் தமிழர் கட்சி ஒருபுறம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. வரும் 19ம் தேதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை பார்க்க மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
0 கருத்துகள்