தமிழக அரசியல் களத்தில் முக்கியமான கட்சிகளில் ஒன்றாக விளங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை ஒட்டி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடவிருக்கும் திரு தொல் திருமாவளவனுக்கு ஏற்கனவே வெற்றி பெற்ற சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் விசிக தனி சின்னத்தில் களம் காண இருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த இரண்டில் சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் அதாவது பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டிலும் வெற்றி வாகை சூடியது. குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவன் நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையே வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்த விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் ஆணையத்திடம் பானை சின்னத்தை ஒதுக்கும்படி முறையிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் சின்னத்தை கொடுக்க மறுத்து விட்டது.
இதனால் தனக்கு ராசியான பானை சின்னத்தைப் பெற தற்பொழுது டெல்லி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் கூடிய விரைவில் வழக்கு விசாரணைக்கு வந்து சின்ன ஒதுக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று நின்று ஜெயித்துக் காட்டியவர் திருமா வளவன் என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.
0 கருத்துகள்